Home » » ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததற்கு எதிராக நவ.24 முதல் 30 வரை அகில இந்திய கிளர்ச்சி இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

    ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததற்கு எதிராக நவ.24 முதல் 30 வரை அகில இந்திய கிளர்ச்சி இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

    Written By Sadhikcdm on நவம்பர் 23, 2016 | PM 12:12



    500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
    இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-லிபரேசன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட்  பிளாக், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய் அன்று சந்தித்து,  ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
    500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், மக்களின் மீது, குறிப்பாக விளிம்புநிலையில் உள்ள மக்களின்மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ள மத்திய அரசுக்கு எதிராக, அகில இந்திய கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிட இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே 70 பேர் இறந்துள்ளனர்.
    தங்களின் அன்றாட பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு, ரொக்கப் பரிவர்த்தனையையே முழுமையாக நம்பி வாழ்ந்து வந்த, உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினர், மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நாட்கூலி பெறுவோர், மகாத்மாக காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நாட்டுப்புற உழைப்பாளி மக்களில் பெரும் திரளினர், அரசின் இந்நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் வறிய நிலைக்கும் வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
    முறையான முன்தயாரிப்பு வேலைகள் எதுவும் மேற்கொள்ளாது, மத்திய அரசு இந்த அறிவிப்பினைச் செய்துள்ளது. இவ்வாறு அறிவித்து இரு வாரங்கள் கழிந்தநிலையிலும்கூட, வங்கிகள் தங்களுக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளின் மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே புதிய வந்திருப்பதாகக் கூறுகின்றன.  இதன் விளைவாக தங்களுடைய அன்றாட செலவினங்களுக்கு எவ்விதமான பணத்தையும் செலவு செய்ய முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
    இத்தகைய சூழ்நிலையில் வரும் 2016 டிசம்பர் 30 வரையிலோ அல்லது புதிய ரூபாய் நோட்டுகள் முழுமையாக புழக்கத்திற்கு வரும் வரையிலோ பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை அனுமதித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
    கிராமப்புற மக்களின் நிதிப் பரிவர்த்தனைகளில் உயிரோட்டமாகச் செயல்பட்டுவரும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளையும் அனைத்து வங்கி செயல்பாடுகளுக்கும் அனுமதித்திட வேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 24 முதல் 30 வரை அகில இந்திய அளவில் மக்கள்திரளைத் திரட்ட கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனவும் இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
    விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ள – பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள – 11 லட்சம் கோடி ரூபாயையையும் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும், அவ்வாறு கடன் பெற்றவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கிட வேண்டும், சஹாரா-பிர்லா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள விவரங்கள் குறித்து புலன்விசாரணை மேற்கொண்டிட வேண்டும். வரி ஏய்ப்புக்கு வகை செய்திடும் இரட்டை வரி ஒப்பந்தங்களை ரத்து செய்திட வேண்டும், வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை வெளியிட வேண்டும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டிட வேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
    இவ்வாறு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது கறுப்புப்பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய அரசு கூறுவது வெற்று ஆரவார நடவடிக்கையே தவிர வேறல்ல. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டும்.
    மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்திடும் அனைத்துப் பகுதியினரும் இந்நடவடிக்கையில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவி அழைக்கின்றன.
    இடதுசாரிக் கட்சிகள், இதர எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து அகில இந்திய எதிர்ப்புநாளை அறிவித்திடும்.
    இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .